Monday, April 6, 2026
Your AD Here

வைத்திய சேவைகளுக்கு எரிபொருள் ஒதுக்கீடு போதுமானதாக இல்லை – அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம்

தற்போது மீண்டும் அமுல்படுத்தப்பட்டுள்ள கியூ.ஆர் குறியீடு எரிபொருள் ஒதுக்கீட்டு முறைமையானது, வைத்தியர்கள் தமது கடமைகளைத் தடையின்றி முன்னெடுப்பதற்குப் போதுமானதாக இல்லை என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவுக்கு அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.

அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

தற்போதைய முறையில் கார்களுக்கு வாரத்திற்கு 15 லீற்றர் எரிபொருள் மாத்திரமே வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாளொன்றுக்கு வெறும் 02 லீற்றர் பெற்றோலையே பயன்படுத்த முடியும்.

கொழும்பு போன்ற நகரங்களில் நிலவும் பாரிய வாகன நெரிசலில், 02 லீற்றர் பெற்றோலைக் கொண்டு வைத்தியசாலைக்குச் சென்று திரும்புவது சாத்தியமற்றது.

பெரும்பாலான வைத்தியர்கள் வைத்தியசாலைக்கு அருகிலேயே வசிப்பதில்லை. அத்துடன் ‘On-call’ கடமைகளில் இருக்கும் வைத்தியர்கள் எந்த நேரத்திலும் அவசரமாக வைத்தியசாலைக்கு அழைக்கப்படலாம். அத்தகைய சூழலில் இந்த ஒதுக்கீடு எவ்விதத்திலும் போதாது.

அத்தியாவசிய சுகாதார சேவைகள் எவ்விதத் தடையுமின்றி முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டுமாயின், வைத்தியர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும் அல்லது விசேட நடைமுறை ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும் என அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, அம்புலன்ஸ் வண்டிகளுக்கு எவ்விதத் தடையுமின்றி எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலிய கூட்டுத்தாபனம் முன்னுரிமை அளித்துள்ள போதிலும், வைத்தியர்களின் தனிப்பட்ட வாகனங்களுக்கான தட்டுப்பாடு இன்னும் தீர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்