அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு ப.நோ. கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தில், சட்டவிரோதமான முறையில் கொள்கலன்களில் 800 லீற்றர் டீசலைப் பதுக்கி வைத்திருப்பதாக பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) அன்று குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தை முற்றுகையிட்ட பொலிஸார், கொள்கலன்களில் நிரப்பப்பட்டு வைக்கப்பட்டிருந்த 800 லீற்றர் டீசலை எடுத்துச்சென்றனர்.
மேலும் அங்கு கடமையாற்றும் ஒருவர் குற்றசாட்டியின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதுடன் 800 லீற்றர் டீசலும் கடந்த (24) அன்று அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தது.
இதன் போது ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தினரினால் குறித்த டீசலுக்கான முறையான ஆவணங்கள் மற்றும் இடம்பெற்ற உண்மை விடயங்களை எடுத்துக் கூறி இருந்த நிலையில் சுமத்தப்பட்ட குற்றசாட்டு போலி என நிறுவிக்கப்பட்டதுடன் இன்றைய தினம் (27) டீசலும் உரியவர்களுக்கு விடுவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக மட்டுப்படுத்தப்பட்ட ஆலையடிவேம்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் நா.இரம்பமூர்த்தி தெரிவிக்கையில்,
ஆலையடிவேம்பு கூட்டுறவுச் சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தினருக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (22) அக்கரைப்பற்று, நீர்ப்பாசனத் திணைக்களத்தினரினால் தங்கள் தேவைக்காக டீசல் தேவையென முறையாக கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும்.
குறித்த அரச கட்டளைக்கு அமைய 04 பெரல் டீசல் வழங்கப்பட்டு திணைக்களத்தினர் கொண்டு செல்வதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்தின் முன் பகுதியில் வைக்கப்பட்டு இருந்தது.
இதன் போது இரகசியத் தகவல் ஒன்று கிடைக்கப்பட்டுள்ளது என தெரிவித்து வருகை தந்த பொலிஸார் 04 டீசல் பெரலையும் கைப்பற்றிய வேளை அரச கட்டளையை காட்டியும் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று அக்கரைப்பற்று நீதிமன்றத்தில் பாரப்படுத்தி இருந்தனர்.
இன்றைய தினம் (27) நீதிமன்றத்தால் விசாரணை செய்யப்பட்டு போதிய ஆதாரங்கள் உள்ளதால் சுமத்தப்பட்ட குற்றசாட்டு போலி என நிறுவிக்கப்பட்டதுடன் 04 டீசல் பெரலையும் நீர்ப்பாசனத் திணைக்களத்தினரிடம் ஒப்படைக்குமாறு நீதி மன்றம் பொலிஸாருக்கு பணித்துள்ளது.
மேலும் ஆலையடிவேம்பு ப.நோ.கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையம் தற்போதைய மற்றும் சென்ற காலங்களிலும் தட்டுப்பாடு ஏற்பட்ட போது பிரதேச மக்களுக்கு முடிந்தவரை எரிபொருள் நெருக்கடி ஏற்படாதவாறு சீரான முறையில் துரிதகதியில் இரவு பகல் பாராது ஊழியர்கள் சேவை மனப்பான்மையுடன் விநியோக சுழற்சியை பெருக்கியுள்ளனர்.
இதனை பொறுக்க முடியாதவர்களால் பிரதேசத்தை மற்றும் ஆலையடிவேம்பு ப.நோ.கூட்டுறவு சங்க எரிபொருள் நிரப்பு நிலையத்தை அவமானப்படுத்தும் திட்டமே இது எனவும் ஆலையடிவேம்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவர் நா.இரம்பமூர்த்தி தெரிவித்தார்.






