திருகோணமலை – குச்சவெளி இலந்தைக்குளம் பகுதியில் விகாரைக்காக அத்துமீறி சுத்தம் செய்யப்பட்ட மக்களுடைய காணிகளை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர், குச்சவெளி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் நேற்று அவ்விடத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு பார்வையிட்டுள்ளனர் .
இதன்போது, மக்களுடைய காணிக்குரிய ஆவணங்கள் ஆராயப்பட்டதுடன் குறித்த மக்களுடைய காணிகளை விடுவிப்பது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனும், சம்பந்தப்பட்ட விகாராதிபதியுடனும் கலந்துரையாடி விரைவில் நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

குச்சவெளி – இலந்தைக்குளம் 5ஆம் கட்டைப்பகுதியில் கடந்த மாதம் 25ஆம் திகதி இரவில் இருந்து பௌத்த பிக்கு ஒருவரின் தலைமையில் புத்த விகாரை அமைப்பதற்காக மக்களுடைய காணி துப்பரவு செய்யப்பட்டு வந்த நிலையில் குச்சவெளி பிரதேச செயலாளரின் கவனத்திற்கு குறித்த விடயம் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து குறித்த நடவடிக்கை தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து குறித்த விடயம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட உயர்மட்ட அரச அதிகாரிகளுடைய கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டிருந்தது.
இலந்தைக்குளம் பகுதியில் காலாகாலமாக வாழ்ந்து வந்த மக்கள் யுத்தத்தின் காரணமாக 1990ஆம் ஆண்டு மற்றும் அதனை அண்டிய காலப்பகுதிகளில் இடம்பெயர்ந்திருந்ததாகவும், பின்னர் அப்பகுதியில் மீள குடியமர்வதற்கான கோரிக்கையை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் நீண்டகாலமாக முன்வைத்து வந்தபோதும் மக்கள் மீள குடியமர்த்தப்படாத நிலையில் அப்பகுதி பௌத்த விகாரைக்காக ஆக்கிரமிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் மக்கள் கவலை வெளியிடுள்ளனர் .






