வட மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவை ஸ்தாபிக்குமாறு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சுகாதார அதிகாரிகளைப் பணித்துள்ளார்.
வடக்கு மாகாண சுகாதாரத்துறை தொடர்பான விசேட கலந்துரையாடல் நேற்று மாகாண ஆளுநர் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது இதன்போதே இப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
வட மாகாண சுகாதார நிர்வாக அதிகாரிகள் கலந்து கொண்ட இக் கலந்துரையாடலில், சகல வைத்தியசாலைகளிலும் அவசர சிகிச்சைப் பிரிவை நிறுவுமாறும், அந்தப் பிரிவிற்கான ஆளணியை நியமித்து உரியப் பயிற்சிகளை வழங்குமாறும் வடக்கு மாகாண ஆளுநர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
வடக்கு மாகாண வைத்தியசாலைகளை ஒருங்கிணைப்பதற்கான தரவுப் பொறிமுறை ஒன்றை விரைவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
இதேவேளை சுகாதார துறைக்கு அவசியமான மனித வளம் மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பான அறிக்கையை விரைவில் சமர்ப்பிக்குமாறு மாகாண சுகாதார பணிப்பாளருக்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் பணித்துள்ளார்.





