எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என முன்னாள் போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன இன்று (04) தெரிவித்தார்.
இருபது வருடங்களுக்கும் மேலாக ஹோமாகம தொகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர், பிரதியமைச்சர், அமைச்சரவை அமைச்சர் எனப் பல பதவிகளை வகித்துத் தன்னால் இயன்றவரை மக்களுக்கு சேவையாற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு மக்கள் பிரதிநிதி இல்லாமல் பல வருடங்களாக அநாதரவாக இருந்த ஹோமாகம தொகுதி மக்களுக்காக இந்த நகரத்தை அறிவு கேந்திர நகரமாக மாற்றுவதற்குத் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளதை எண்ணித் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
அடுத்த சில வருடங்களில் மீண்டும் கலாநிதிப் பட்டம் ஒன்றுக்காகக் கற்கை நெறியை மேற்கொள்ளவுள்ளதாகவும், சினிமா திரைப்படம் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.





