ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அழைப்பின் பேரில் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சற்றுமுன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டை வந்தடைந்தார்.
இவரது இந்த விஜயத்தின் போது பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவார்.
இலங்கையில் தங்கியிருக்கும்போது, இந்தியப் பிரதமர் அநுராதபுரத்துக்குச் சென்று புனித ஸ்ரீ மகா போதியை வழிபடவுள்ளதுடன், இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் செயற்படுத்தப்படும் பல திட்டங்களையும் தொடக்கி வைப்பார்.
அத்தோடு இரு நாடுகளுக்குமிடையே கைச்சாத்தான பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் பரிமாற்றிக்கொள்ளப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடியுடன் இந்திய வெளிநாட்டு விவகார அமைச்சர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுச் செயலாளர் மற்றும் இந்திய அரசின் ஏனைய சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளார்கள்.
பாதுகாப்பு ஒப்பந்தமொன்றும் இன்று கைச்சாத்திடப்படலாமெனத் தெரிகிறது.சம்பூரில் மின் திட்டமொன்றை ஆரம்பிக்க திருகோணமலைக்கு பிரதமர் செல்லவிருந்த போதும் பாதுகாப்புக் காரணங்களையொட்டி அவர் அங்கு செல்லமாட்டாரெனச் சொல்லப்பட்டது.
அத்தோடு கொழும்பில் தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களை மோடி நாளை சனிக்கிழமை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.