Tuesday, September 9, 2025
Your AD Here

பயங்கரவாத தடைச் சட்டத்தின் பிரயோகம் உடன் இடைநிறுத்தப்பட வேண்டும்!

இலங்கையில் இடம்பெற்ற கடந்தகால மீறல்கள் மற்றும் வன்முறைகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கினாலும் உருவான காயங்களை ஆற்றுவதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்கும் தற்போது தகுந்த வாய்ப்பு கிட்டியிருப்பதாக பேரவையில் சுட்டிக்காட்டியுள்ள ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க், கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளை கையாள்வதற்காக சுயாதீன விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய பிரத்தியேக நீதிப்பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஸ்தாபிக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று (8) ஜெனீவாவில் ஆரம்பமானது. கூட்டத்தொடரின் தொடக்கநாள் அமர்வில் ஜெனீவா நேரப்படி காலை 12.15 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 3.45) உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான தனது எழுத்துமூல அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து உரையாற்றினார்.

அதன்படி கடந்தகால மீறல்கள் மற்றும் வன்முறைகளாலும், தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கினாலும் உருவான காயங்களை ஆற்றுவதற்கும், அவற்றிலிருந்து மீள்வதற்கும் இலங்கைக்கு தற்போது வரலாற்று முக்கியத்தும் மிக்க வகையில் வாய்ப்பு கிட்டியிருப்பதாக சுட்டிக்காட்டிய உயர்ஸ்தானிகர், நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதி செய்வதற்கான சந்தர்ப்பம் அமைந்திருப்பதாகத் தெரிவித்தார். அத்தோடு அண்மையில் தான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தபோது முன்னெப்போதுமில்லாத வகையில் சீரான புதிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாக அரசாங்கம் வாக்குறுதியளித்ததாகவும், அவ்வாக்குறுதிகளுக்கு செயல்வடிவம் அளித்து அவை உரியவாறு நிறைவேற்றப்படவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேபோன்று எதிர்வருங்காலங்களில் நாட்டில் நிலையான நல்லிணக்கத்தையும் அமைதியையும் கட்டியெழுப்புவதற்கு பொறுப்புக்கூறல் மற்றும் நீதி நிலைநாட்டப்படவேண்டியது அவசியம் எனக் குறிப்பிட்ட வோல்கர் டேர்க், இலங்கைக்கான விஜயத்தின்போது கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னமும் துயரத்தையும், அத்துமீறல்களையும் அனுபவித்து வருவதாகவும், செம்மணி மனிதப் புதைகுழியைப் பார்வையிடச் சென்றபோது அங்கிருந்தவர்கள் தாம் முகங்கொடுத்து வரும் துன்பத்தைத் தன்னிடம் முறையிட்டதாகவும் தெரிவித்தார். அதுமாத்திரமன்றி தெற்கைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது கணவருக்காக நீண்டகாலமாகக் காத்திருப்பதாகத் தன்னிடம் கூறியதாகவும் குறிப்பிட்ட அவர், எனவே தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு, நீதி வழங்கப்படவேண்டும் என்றும் தெரிவித்தார்.

அடுத்ததாக கடந்த காலங்களில் அரசு, பாதுகாப்புப் படையினர் மற்றும் ஆயுதக் குழுவான தமிழீழ விடுதலைப்புலிகள் உள்ளிட்ட தரப்பினரால் மீறல்கள், வன்முறைகள் நிகழ்த்தப்பட்டன என்ற விடயத்தை ஏற்றுக்கொள்ளவேண்டும் எனக் கூறிய உயர்ஸ்தானிகர், நினைவுகூரல்களில் ஈடுபடுவதற்கு இடமளிக்கப்பட்டிருப்பது சாதகமான விடயம் எனக் குறிப்பிட்டதுடன் மீள்நிகழாமையை உறுதிப்படுத்துவதற்கு ஏதுவான வகையில் அவசியமான சட்ட மறுசீரமைப்புக்க்ள மேற்கொள்ளப்படவேண்டும் என்றார்.

குறிப்பாக சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை ஸ்தாபிக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருப்பதை வரவேற்பதாகவும், அச்செயன்முறையில் சிவில் சமூகம் உள்ளடங்கலாக சம்பந்தப்பட்ட சகல தரப்பினரும் உள்வாங்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், கடந்த தசாப்தங்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாள்வதற்காக சுயாதீனமான விசேட சட்டவாதியின் பங்கேற்புடன்கூடிய பிரத்யேக நீதிப்பொறிமுறையை இலங்கை அரசாங்கம் ஸ்தாபிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் ‘பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் பிரயோகம் உடன் இடை நிறுத்தப்படவேண்டும். நிகழ்நிலைக் காப்புச் சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச் சட்டம், அரச சார்பற்ற அமைப்புக்கள் தொடர்பான உத்தேச சட்ட வரைவு மற்றும் தனிநபர் தரவுப் பாதுகாப்பு தொடர்பான உத்தேச சட்ட வரைவு என்பன உள்ளடங்கலாக மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடிய சட்டங்கள் உரிய நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்பட வேண்டும். வலிந்து காணாமலாக்கப்படல்கள் மற்றும் காணி சுவீகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் இயங்கிவரும் செயற்பாட்டாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மீதான ஒடுக்குமுறைகளும், அச்சுறுத்தல்களும் தொடர்கின்றன. அவை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வரப்படவேண்டும். அதுமாத்திரமன்றி பாதுகாப்புத்துறை மறுசீரமைக்கப்பட வேண்டும். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவமயமாக்கம் முடிவுக்குக் கொண்டு வரப்படுவதுடன் தனியாருக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவேண்டும். மலையகத் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படவேண்டும்’ என்றும் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் தெரிவித்தார்.

அத்தோடு இலங்கை தொடர்பில் தமது அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் ஊடாக இலங்கையின் கடந்தகால மீறல்கள் தொடர்பில் 105,000 ஆதாரங்கள் மற்றும் தகவல்கள் திரட்டப்பட்டிருப்பதாகவும், சர்வதேச நியாயாதிக்கத்தின் ஊடாக இவற்றைப் பயன்படுத்தி பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கு உறுப்புநாடுகள் முன்வரவேண்டும் எனவும் அழைப்புவிடுத்த உயர்ஸ்தானிகர், மனிதப் புதைகுழிகளின் அகழ்வு நடவடிக்கைகளுக்கு அவசியமான உதவிகளை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்