2025ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகளை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படுவதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பின்படி, பின்வரும் செயற்பாடுகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது:
மேலதிக வகுப்புக்கள் மற்றும் கருத்தரங்குகள்: பரீட்சை நடைபெறவுள்ள பாடங்கள் தொடர்பான விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துதல்.
வினாத்தாள் விநியோகம்: பரீட்சையில் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படும் வினாக்களை உள்ளடக்கிய மாதிரி வினாத்தாள்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல்.
பிரசார நடவடிக்கைகள்: பரீட்சை வினாக்களுக்கு நிகரான வினாக்களை வழங்குவதாகக் கூறி சுவரொட்டிகள், பதாகைகள், துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் அல்லது இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்துதல்.
இந்த உத்தரவுகளை மீறிச் செயற்படும் நபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு எதிராகப் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைத் திணைக்களம் எச்சரித்துள்ளது.
யாராவது இத்தடையை மீறிச் செயற்பட்டால், அது குறித்து அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது பின்வரும் அவசர இலக்கங்களுக்கோ முறைப்பாடு செய்யுமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது:
பொலிஸ் தலைமையகம்: 119
பரீட்சைத் திணைக்கள அவசர இலக்கம்: 1911
2025ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பாடங்கள், எதிர்வரும் ஜனவரி 12 முதல் ஜனவரி 20 வரை நாடு முழுவதும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





