Sunday, March 1, 2026
Your AD Here

தவறு செய்த அமைச்சர்கள் உடன் பதவி விலக வேண்டும் , முழு அரசாங்கத்தையும் விமர்சிப்பது முறையல்ல – வாசுதேவ நாணயக்கார

நாட்டில் அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் நிலக்கரி கொள்வனவு ஊழல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது ஒட்டுமொத்தமாக குற்றம் சுமத்துவது முறையற்றது என ஜனநாயக இடதுசாரி முன்னணி கட்சியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் குறிப்பிட்டுள்ளார்.

அவர் அங்கு மேலும் கூறுகையில்,

தற்போது நாட்டில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் மோதல்கள் அதிகரித்துள்ளன. குற்றவாளிகள் தமது இலக்குகளை நிறைவேற்றிக் கொள்ள அவசரப்படுகின்றனர். எனினும், இவர்களைக் ஒடுக்குவதற்கு அரசாங்கம் தீவிரமான சுற்றிவளைப்புகளை முன்னெடுத்து வருகின்றது. வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றாலும் இனி தப்பிக்க முடியாது என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர்கள் அவசரமாக இவ்வாறான தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றனர். விரைவில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவார்கள்.

தற்போது நிலக்கரி கொள்வனவு தொடர்பான பெரும் சர்ச்சை எழுந்துள்ளது. தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலைக்கு கொள்வனவு செய்ததன் காரணமாக மின்சார சபைக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நஷ்டத்தை நுகர்வோர் தலையில் சுமத்த அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது.

இந்த ஊழலுக்குப் பொறுப்பான அமைச்சர் இது குறித்து உரிய பதிலை வழங்க வேண்டும். ஒரு தனிப்பட்ட அமைச்சரின் அல்லது அதிகாரியின் தவறுக்காக ஒட்டுமொத்த அரசாங்கத்தையும் பட்டை தீட்டுவது தவறான அரசியல் கலாசாரமாகும். குறித்த அமைச்சரால் தெளிவான விளக்கத்தை அளிக்க முடியாவிட்டால், அவரை அமைச்சரவையிலிருந்து நீக்கிவிட்டு, அரசாங்கம் புதிய அமைச்சரை நியமிக்க வேண்டும். உண்மையான குற்றவாளியை விட்டுவிட்டு அரசாங்கத்தை மட்டும் விமர்சிப்பதன் மூலம் உண்மையான குற்றவாளி தப்பித்துக் கொள்ளவே வழி பிறக்கும்.

முந்தைய அரசாங்க காலத்து ஊழல்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், தற்போதைய அரசாங்கத்தில் உள்ளவர்களுக்கு எதிராக எவ்வித முறைப்பாடுகளும் காவல்துறைக்கோ அல்லது இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கோ இதுவரை முன்வைக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவருக்கு எதிராக முறைப்பாடு கிடைத்துள்ளது. அவ்வாறான நிலையில், அந்த அதிகாரி தனது பதவியிலிருந்து விலகி, விசாரணைகளுக்கு இடமளித்து தாம் நிரபராதி என நிரூபிக்க வேண்டும். அதுவே சரியான முறையாகும்.

முன்னதாக சர்ச்சைக்குள்ளான 323 கொள்கலன் விவகாரத்தில் தொடர்புடைய அமைச்சர் தற்போது அந்தப் பொறுப்பில் இல்லை. அது தொடர்பில் பாராளுமன்ற விசேட குழு விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. அது ஒரு சிறந்த முன்மாதிரியாகும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்