அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து அரச பணியாளர்களதும் அடிப்படை சம்பளத்தை அதிகரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொதுச் சேவைத் துறையினரின் வேதன பிரச்சினைகள் தொடர்பான நிபுணர்கள் குழுவின் தலைவர் உதய செனவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் கடைநிலை அரச பணியாளர்களின் அடிப்படை வேதனம் 24 சதவீதத்தினாலும், உயர்நிலையில் உள்ள அரச பணியாளர்களின் வேதனம் அவர்களின் தகுதிகளுக்கு அமைய 24 முதல் 50 சதவீதம் வரையிலும் அதிகரிக்கப்படவுள்ளது.
அதேவேளை நிலவும் பணவீக்கத் தன்மை மற்றும் பொருளாதார நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, 2025 ஜனவரி முதல் அரச பணியாளர்களின் வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவை 25,000 ரூபாவாக அதிகரிப்பதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக உதய செனவிரத்ன தெரிவித்துள்ளார் .





