கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் போது முன்கூட்டி நேரம் ஒதுக்கும் முறைமை இன்று முதல் இடைநிறுத்தப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இன்று முதல் முதலாவதாக வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற முறை பின்பற்றப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்காக பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்துக்குச் சென்றுள்ள மக்கள் கடந்த சில நாட்களாக பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கிவருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் முன்னதாக அறிக்கை ஒன்றை விடுத்த, குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம், கடவுச்சீட்டு விநியோக நடவடிக்கை தற்போது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும் புதிய இலத்திரனியல் கடவுச்சீட்டை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக வெளிநாட்டு நிறுவனமொன்றிடமிருந்து விலை மனு பெறப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.