Sunday, February 8, 2026
Your AD Here

ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்.

‘Rebuilding Sri Lanka’ வேலைத்திட்டத்தின் கீழ் மக்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்காக மாவட்ட மட்டத்தில் திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் அதில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (20) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. 

பாதுகாப்பு, விவசாயம், நீர்ப்பாசனம், நீர் வழங்கல், கடற்றொழில், போக்குவரத்து, வீடமைப்பு மற்றும் நிர்மாணம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அமைச்சுக்களின் செயலாளர்கள், உரிய நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து மாவட்ட செயலாளர்களும் இதில் கலந்துகொண்டனர். 

வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா மற்றும் வீட்டு உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வழங்கப்படும் 50,000 ரூபா கொடுப்பனவை இவ்வருட டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை இதன்போது விடுத்தார். 

வீடுகள் மற்றும் பயிர் சேதங்களுக்கான நட்டஈடு வழங்கல், பாதுகாப்பு நிலையங்களின் செயற்பாடுகள், மக்களை மீளக்குடியேற்றல், வாழ்வாதாரங்களை மீளக் கட்டியெழுப்பல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல் ஆகியவற்றின் முன்னேற்றங்கள் குறித்தும் ஆராயப்பட்டது. நட்டஈடு வழங்கும் போது எவரும் விடுபடாத வகையில், தகுதியுள்ள அனைவருக்கும் அந்தப் பலனைப் பெற்றுக்கொடுக்க வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி வலியுறுத்தினார். 

மக்களை மீளக்குடியேற்றல் மற்றும் அதற்காகத் தேவையான காணிகளை அடையாளம் காணுதல் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. பிரதான மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய வீட்டுத் திட்டங்கள் குறித்து தனியானதொரு திட்டத்தை வகுக்கவும், இது தொடர்பில் மீண்டும் ஒரு கலந்துரையாடலை நடத்தவும் நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

அதிக அபாயமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

பெரும்போக விவசாயத்திற்குத் தேவையான நீர்ப்பாசன புனரமைப்பு, நட்டஈடு மற்றும் விதை நெல் உள்ளிட்ட வசதிகளைப் பெற்றுக்கொடுக்கும் வேலைத்திட்டங்கள் குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது. 

அதேபோல், சேதமடைந்த கால்நடைப் பண்ணைகள் மற்றும் சிறு வர்த்தக நடவடிக்கைகளை மீள ஆரம்பிக்க உதவுதல், மீன்பிடித் தொழிலை வழமைக்குத் திருப்புதல் மற்றும் பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் 15,000 ரூபா கொடுப்பனவை விரைவில் வழங்கி முடித்தல் ஆகியன குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்