Tuesday, April 14, 2026
Your AD Here

இளங்குமரன் எம்.பி. மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒத்திவைப்பு: சுமந்திரன் தரப்புடன் சட்டப் போராட்டம்!

தேசிய மக்கள் சக்தியின் (NPP) யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வி. இளங்குமரன் மற்றும் கஜபாகு ஆகியோருக்கு எதிராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதிச் சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நேற்றையதினம் (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கு ஒத்திவைப்பு:

மேன்முறையீட்டு நீதிமன்றின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெனாண்டோ ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பாக குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, இளங்குமரன் எம்.பி. சார்பில் ஆஜரான சட்டத்தரணி சாமர நாணயக்கார, மற்றைய பிரதிவாதியான கஜபாகுவுக்குச் சட்டத்தரணி ஒருவரை நியமிப்பதற்கு கால அவகாசம் கோரினார். இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை அடுத்த வருடம் பெப்ரவரி 5ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் ஆஜரானோர்:

நேற்று நீதிமன்றத்தில் இளங்குமரன் எம்.பி. மற்றும் கஜபாகு ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

மனுதாரரான எம்.ஏ. சுமந்திரன் சார்பில், சட்டத்தரணி மோகன் பாலேந்திராவின் அறிவுறுத்தலின் பேரில் சிரேஷ்ட ஜனாதிபதிச் சட்டத்தரணி கனகஈஸ்வரன் ஆஜராகி இருந்தார்.

வழக்குத் தொடுத்ததன் பின்னணி:

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டதன் பின்னணி சர்ச்சைக்குரிய சம்பவத்துடன் தொடர்புடையது:

தமிழ்நாட்டில் அகதியாகத் தஞ்சம் கோரியிருந்த சின்னையா சிறிலோகநாதன் என்பவர், கடந்த மே 29ஆம் திகதி பலாலி விமான நிலையம் ஊடாக வருகை தந்தபோது குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

மறுநாள், மே 30ஆம் திகதி மல்லாகம் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்டபோது, சிறிலோகநாதனின் புதல்வரின் கோரிக்கைக்கு அமைய எம்.ஏ. சுமந்திரன் மன்றில் ஆஜராகியிருந்தார். எனினும், நீதிவான் அவரை விளக்கமறியலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்திருந்தார்.

இதற்கு மறுதினம், இளங்குமரன் எம்.பி. உள்ளிட்டவர்கள் மற்றொரு சட்டத்தரணி ஊடாக மனுத் தாக்கல் செய்த நிலையில், சிறிலோகநாதனுக்குப் பிணை வழங்கப்பட்டது.

பிணை வழங்கப்பட்ட பின்னர், நீதிமன்றிற்கு அருகில் வைத்து இளங்குமரன் எம்.பி. உள்ளிட்டவர்கள், சிறிலோகநாதன் விளக்கமறியலில் வைக்கப்பட்டதற்குக் எம்.ஏ. சுமந்திரனே காரணம் என்ற சாரப்படக் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர். அந்தக் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டே, நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்