டித்வா புயல் காரணமாக நாட்டில் பல்வேறு இடங்கள் பாதிப்புற்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களின் மக்கள் பாதிப்புக்குள்ளாகியிருந்தனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணம் வழங்கும் செயற்பாடுகளைப் பல்வேறு தரப்புகளும் மேற்கொண்டு வருகின்ற நிலையில் இலங்கைத் தமிழரசுக் கட்சியூடாக பல நிவாரணப் பணிகள் மாவட்டம் பூராகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த அடிப்படையில் மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கதிரவெளி கிராமத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணியினை இன்றைய தினம் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணி சார்பில் மட்டக்களப்பு நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணித் தலைவர் க.சோபனன் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் வாகரை கதிரவெளி பிரதேசத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டு பாதிப்புற்ற மக்களுக்கான நிவாரணப் பொருட்களை வழங்கி வைத்தனர்.
இதன்போது வாகரை பிரதேச சபை உறுப்பினர் வீரபத்திரன் மோகணசுந்தரம், வாலிபர் முன்னணியின் செயலாளர் யோகநாதன் சசிகரன் உள்ளிட்ட நிருவாக உறுப்பினர்கள், பிரதேச இணைப்பாளர்களும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.















