சட்டவிரோத சுற்றுலா வழிகாட்டல் நடவடிக்கைகளில் ஈடுபடும் சுற்றுலா வழிகாட்டிகள் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுப்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இன்று (23) உயர் நீதிமன்றத்தில் உறுதியளித்தது.
இலங்கை சுற்றுலா வழிகாட்டி விரிவுரையாளர்கள் சங்கத்தால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு அழைக்கப்பட்ட போது, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த மனு இன்று (23) எஸ்.துரை ராஜா, மஹிந்த சமயவர்தன மற்றும் மேனகா விஜேசுந்தர ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் அமர்வு முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
இந்த மனு அழைக்கப்பட்ட போது, மனுதாரர் சங்கத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே, நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, சட்டவிரோத சுற்றுலா வழிகாட்டிகலால் சுற்றுலாத் தொழிற்துறை சரிந்து, நாடு அந்நிய செலாவணியை முற்றிலும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். இந்த சூழ்நிலையைத் தடுக்க பிரதிவாதிகள் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பின்னர் பிரதிவாதிகள் சார்பாக ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் கலாநிதி அவந்தி பெரேரா, நீதிமன்றத்தின் முன் சமர்ப்பணங்களை முன்வைத்து, சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை இந்த நிலைமையைத் தீர்க்க ஒரு தனி பணியகத்தை நிறுவ எதிர்பார்க்கிறது என்றும், இது தொடர்பாக மூன்று மாதங்களுக்குள் தேவையான சட்ட நடவடிக்கையை எடுக்க எதிர்பார்க்கிறது என்றும் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.
பின்னர் மனுவின் விசாரணை முடிவுக்கு வந்தது.





