இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவரே மறைந்த இரா.சம்பந்தன். எமது அரசியல் வரலாற்றில் உருவாகிய சிரேஷ்ட தலைவர்களிடையே சிறந்த குணாம்சங்களுடன் மதிப்பு மிக்க அரசியல்வாதி என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (25) இடம்பெற்ற காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜவரோதயம் சம்பந்தன், ஏ. பிலபிற்றிய,டபிள்யூ, ஏ.ஏக்கநாயக்க,லக்கி ஜயவர்த்தன மற்றும் மாலனீ பொன்சேக்கா ஆகியோர் மீதான அனுதாபப் பிரேரணையில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத ஒருவராக மறைந்த இரா.சம்பந்தன் இருந்தார். அவரின் செயற்பாடுகள் அனைவருக்கும் முன்மாதிரியானவையே. எப்போதும் அவர் மக்கள் தொடர்பிலேயே சிந்தித்து நடந்துகொண்டார்.
அவர் ஒரு மனிதாபிமானத்திற்கு சிறந்ததொரு ஆலோசகரும் கூட. பல சந்தர்ப்பங்களில் சமுக, பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கதைத்துள்ளார். அரசியலில் சிறந்தவொரு தலைவராக செயற்பட்டார்.
எமது அரசியல் வரலாற்றில் உருவாகிய சிரேஷ்ட தலைவர்களிடையே சிறந்த குணாம்சங்களுடன் மதிப்பு மிக்க அரசியல்வாதியாக, நாட்டின் இறையாண்மை, அரசியல் சுதந்திரத்திற்காக பங்களிப்பு செய்த, தான் பிரதிநிதித்துவப்படுத்திய மக்களின் சிவில், கலாசாரம் உள்ளிட்ட மனித உரிமைகளுக்காக பங்களிப்பு வழங்கிய அவரின் மறைவுக்காக அவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.





