Friday, April 24, 2026
Your AD Here

மீண்டும் பேசும் பொருளாக மாறிய பொலிஸ்மா அதிபர் பதவி!

இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பொலிஸ்மா அதிபர் பதவி மீண்டும் பேசும் பொருளாகியுள்ளது. 

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணையை ஓகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள பாராளுமன்ற விவகாரக் குழு முடிவு செய்த நிலையில் இந்த விடயம் பேசும் பொருளாகியுள்ளது. 

சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் நேற்று முன்தினம் கூடிய பாராளுமன்ற விவகாரக் குழுவில் இந்த முடிவு எடுக்கப்பட்டதுடன், அதன்படி, தேசபந்து தென்னகோனை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணை 2002 ஆம் ஆண்டு 05 ஆம் இலக்க (நடைமுறை) சட்டத்தின் பிரிவு 17 இன் கீழ் ஓகஸ்ட் 5 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணி முதல் மாலை 4.00 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

அதன் பிறகு குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் வரலாற்றில் பொலிஸ்மா அதிபர் தொடர்பாக விசாரிக்க நியமிக்கப்பட்ட முதல் பாராளுமன்றக் குழு, தேசபந்து தென்னகோன் தொடர்பில் நீண்ட விசாரணையை நடத்தியது. 

விசாரணையின் இறுதி முடிவு சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், இப்போது எஞ்சியிருப்பது விவாதம் நடத்தி தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவது மட்டுமே. 

159 ஆண்டுகால பொலிஸ் திணைக்கள வரலாற்றில் தேசபந்து தென்னகோன் 36வது பொலிஸ்மா அதிபர் ஆவதுடன், அவர் 2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 26 ஆம் திகதி அந்தப் பதவியைப் பொறுப்பேற்றார். 

இருப்பினும், தேசபந்து தென்னகோன் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டது தொடர்பாக ஒரு சர்ச்சைக்குரிய சூழ்நிலை இருந்த நிலையில், தேசபந்து தென்னகோன் பாராளுமன்ற விவாதத்தின் மூலம் பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், அவ்வாறு விலக்கப்படும் முதலாவது பொலிஸ்மா அதிபர் இவராவார். 

இருப்பினும், தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் பிரேரணையின் மீதான வாக்கெடுப்பு தொடர்பாக அரசியல் கட்சிகளிடையே வெவ்வேறு நிலைப்பாடுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க ஐக்கிய மக்கள் சக்தி முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இருப்பினும், இந்த விடயத்தில் அவர்கள் இறுதி முடிவு எடுக்கவில்லை என்பதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் ஐக்கிய மக்கள் சக்தியின் குழு கூட்டத்தில் இந்த விடயத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும். 

இருப்பினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த பிரேரணைக்கு எதிராக வாக்களிக்கும் என்றும் அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த பிரேரணையை நிறைவேற்ற, வருகை தராத பாராளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள், அதாவது 113​க்கும் மேற்பட்டோர் வாக்களிக்க வேண்டும். 

இந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டால், ஜனாதிபதி, தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவார். 

இதற்கிடையில், தேசபந்து தென்னகோன் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டால் அடுத்த பொலிஸ்மா அதிபர் பதவி குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

 சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய தற்போது பதில் பொலிஸ்மா அதிபராக பணியாற்றி வருவதுடன், அவர் 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 24ஆம் திகதி அந்தப் பதவியைப் பொறுப்பேற்றார். 

தற்போதைய பதில் பொலிஸ்மா அதிபர் நிரந்தர பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்படலாம் எனவும், அத்துடன் தற்போது மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் பத்திநாயக்கவின் பெயரும் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0SubscribersSubscribe

சமீபத்திய செய்திகள்