யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வசிக்கும் பொது மக்கள் போக்குவரத்துப் பிரச்சினைகள் மற்றும் சிறு குற்றங்கள் உள்ளிட்ட அவசர தேவைகளுக்காகப் பொலிஸ் அவசர சேவையை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையில், விசேட தொலைபேசிச் சேவை இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் யாழ்ப்பாண நகரை மையமாகக் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயமஹா தலைமையில், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் வைத்து சம்பிரதாயபூர்வமாக இந்தச் சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த விசேட அவசர சேவையைப் பெறுவதற்கு, பொதுமக்கள் 021 222 2221 என்ற தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்துத் தமது முறையீடுகளைப் பதிவு செய்யலாம்.
பொதுமக்கள் இந்த அவசர இலக்கத்துக்கு அழைப்பெடுப்பதன் மூலம், அந்தந்தப் பகுதிகளுக்குப் பொலிஸார் உடனடியாக விரைந்து சென்று பிரச்சினைகளைத் தீர்ப்பார்கள் என்று பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள எந்தப் பகுதியில் இருந்தும் இந்த இலக்கத்துக்கு அழைப்பெடுத்து முறையிட முடியும் என்றும், அவ்வாறு செய்யப்படும் முறையீடுகளுக்கு அந்தந்தப் பகுதிப் பொலிஸ் நிலையங்கள் ஊடாகப் பொது இடங்கள் மற்றும் போக்குவரத்துக்களின் போது ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பாக உடனடித் தீர்வைப் பெற முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.





