(டாக்டர் சிவஸ்ரீ ராமசந்திர குருக்கள் பாபுசர்மா )
ஆகஸ்ட் 4ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆடி அமாவாசை தினம் ஆகும்.
ஆடி அமாவாசை தினங்களில் குறிப்பாக கொழும்பில் முகத்துவாரம் சங்கமத்திலும் வெள்ளவத்தை கடற்கரை பகுதியிலும் கீரிமலை மற்றும் கடற்கரை ஓரங்களிலும் ஆற்றோரங்களிலும் தர்ப்பணம் செய்வது மிகவும் சிறப்பானதாகும். அதேவேளை அந்தணர்களுக்கு தானம் கொடுத்து பசு மாட்டுக்கும் அகத்திக்கீரை கொடுத்து சிவ வழிபாடு மேற்கொண்டு சிவனுக்கு மோட்ச வழிபாடு மேற்கொள்வதும் சிறப்பானதாகும்.
தந்தை இழந்து ஒரு வருடம் முடித்தவர்கள் முன்னோர்களின் ஆன்மாவை நினைத்து தர்ப்பணம் செய்வது சிறப்பானதாகும்.
சூரியன் வட திசையில் இருந்து தென் திசை நோக்கி (தட்சினாயம்) செல்லும்பொழுது முதல் வரும் அமாவாசை ஆடி அமாவாசை ஆகும்.
சாஸ்திரத்தில் இறந்தவர்கள் இறந்த திதியில் தான் பூலோகத்திற்கு நம்மை தேடி வருவார்கள் என சொல்லப்பட்டுள்ளது. இங்கு அமாவாசை அன்று பூலோகம் சென்றடைவார்கள்.
ஆகவே, இந்த நாட்களை விட்டு அவர்கள் பூமிக்கு வராத நாட்களில் அவர்களுக்கு உணவளிப்பது எந்த ஒரு பயனும் இல்லை.
இந்த சாஸ்திரங்களை முறையாக
கடைபிடிக்காமல் விடுவதனால்தான்
பித்ருதோஷமும், பித்ருசாபமும்
ஏற்படுகிறது.
பித்ருதோஷம், பித்ருசாபம் என்றால் இறந்தோர்கள் அவர்கள் நம்மை சபிப்பது கிடையாது. ஆனால்,
நமக்காக செய்யப்படும். காரியங்களை சரியாக
செய்யவில்லையே, நமக்கான உணவு கிடைக்கவில்லையே என இறந்தவர்களின் ஆத்மா
பெரு மூச்சுவிட்டால் கூட அது நம்முடைய பரம்பரையை தாக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இவ்வாறு இறந்தவர்களின் ஆத்மா எப்படி தன்னுடைய யாத்திரையை மேற்கொள்கிறது?
அந்த சந்தர்ப்பத்தில் இறந்தவர்களுக்கு என்னென்ன காரியங்கள் செய்ய வேண்டும் என்பதைப் பற்றி கருடபுராணம் விளக்கமாக சொல்கிறது.
ஆனால் இந்த கருடபுராணத்தை வீட்டில் படிக்கக் கூடாது. இறப்பு ஏற்பட்ட வீட்டில் மட்டுமே படிக்க வேண்டும் என்பது ஐதீகம்.
இறந்தவர்களது ஆசியை முழுமையாக பெற வேண்டும் என்றால், தர்ப்பணத்தையும், திவசத்தையும் முறையாக செய்யப்படுவதே உத்தமம் ஆகும்.
இறந்தவர்களுக்கு ஒரு மாதம் என்பது ஒரு நாளாக கருதப்படுகிறது. அந்த ஒரு நாள் அவர்கள் மறைந்து போன திதி அல்லது அமாவாசை தினம் மட்டுமே அவர்கள் உணவை தேடி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நாட்களில் மட்டுமே திவசம், தர்பணம் செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று ஆகும்.
எனவே ஆடி அமாவாசை பூஜை செய்து இறந்தவர்களுக்கு சிவனோடு கலந்து இன்பமாய் வாழ சிவனை பிரார்த்தனை செய்யுங்கள்.